70 போதை மாத்திரைகள்,மாவாவுடன் கடை உரிமையாளர் கைது!



வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டபோது அப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கடையில் இருந்து 70 போதை மாத்திரைகள் பொலிஸார் கைப்பற்றியதுடன் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வியாபார நிலைய உரிமையாளரான மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.