காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இளைஞர்களினால் முற்றுகை : இருவர் கைது !



மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய நகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழகம் அதிரடியான முடிவை எடுத்து கழகத்தின் ஆறு பேர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவருவரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை அப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் குளத்தின் வாய்க்கால் பகுதியில் இறங்கி தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன் போது கசிப்பு உற்பத்தியாளர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கசிப்பு பரல் இரவாகியும் அவ்விடத்தில் இருந்த நிலையில் குறித்த குழுவினரால் மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் அடம்பன் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் அவ்விடத்தில் கசிப்பு உற்பத்தி வேலையில் ஈடுபடும் இருவர் தாம் மேலும் சட்டவிரோத மது உற்பத்தியை முன்னெடுக்க உள்ளதாகவும் பிடிக்க முடிந்தால் பிடித்து பார்க்கட்டும் , பிடித்து கொடுத்தவர்களுக்கு தாக்குவதாகவும் எச்சரித்தனர். உடனே அவர்கள் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற மையினால் இளைஞர்கள் சிறுவர்கள் பாடசாலை செல்லாது கசிப்பு மாபியாக்களுக்கு அடிமையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.