மட்டக்களப்பில் மாணவிக்கு ஊசி ஏற்றப்பட்டதாக பரவிய தகவல் போலியானது !




மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6) விடுவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார்.

“நகரிலுள்ள உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு இளைஞன் ஒருவர் வந்து பெற்றோரதும் சிறுமியின் பேரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி போட்டுவிட்டதாகவும் , உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஏனைய பிள்ளைகள் கவனம் என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (02) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் மயக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், தந்தையாரிடம் தாயார் சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில் மாலை 3 மணிக்கு மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில், சிறுமி தெரிவித்ததை தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு தந்தையர் கேட்டுக் கொண்டதையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிஸார் சிறுமிக்கு ஊசி ஏற்றியதாக சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

சிறுமி பொய் சொல்லியுள்ளார் என்பதும், சிறுமி தெரிவித்தமை பொய் என அறியாது அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்துள்ளார்.

அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

எனவே, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பொதுமக்களை பீதியடைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.