கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்பு !


கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட "படா" என்றழைக்கப்படும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன .

இந்த சந்தேக நபர் தங்கம், பணம் என்பனவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சில கூரிய ஆயுதங்களையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மொரகஹஹேன, கஸ்பேவ, பிலியந்தலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இவர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான “ மன்னா சமந்த“ என்பவரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் இணைந்து கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபரான "மன்னா சமந்த" பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.