494 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின், நாளை (28) காலை 10.00 மணிக்கு INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு அதியுயர் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து 15.12.2025 அன்று நடத்திய சோதனையின் போது 6 வெளிநாட்டினரிடமிருந்து மேற்படி போதைப்பொருளில் ஒரு பகுதியான 250 கிலோ 996 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

19.04.2022 அன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 7 வெளிநாட்டு சந்தேக நபர்களிடமிருந்து ஏனைய பகுதியான 243 கிலோ 052 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக, பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் கீழ் பொலிஸார் நாளாந்தம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.