மதுபானசாலைகளுக்கு பூட்டு - வௌியான அறிவிப்பு


மே தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து மதுவரித் திணைக்களம் இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக தொழிலாளர் தினத்திற்காக நாளை (1) மே தின பேரணிகள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைக்கப்பட்ட ஹோட்டல் உரிமங்கள் (R.B. 07/08, புட்டிக் விலா அனுமதிப் பத்திர பகுதிகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ) தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் இன்று (30) மூடப்படும் நேரத்திலிருந்து மே 2 ஆம் திகதி திட்டமிடப்பட்ட திறப்பு நேரம் வரை மூடப்பட வேண்டும் என்று மதுவரித் திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும், வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும், '1913' துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு மதுவரித் திணைக்களம், பொதுமக்களைக் கோரியுள்ளது.