அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள்



அம்பாரை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனக் குழுக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் பிரதேச சபைகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களில் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு , சேவையாற்றி இருப்பினும் இம்முறை 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் அல்லது வாய்ப்பு பறிக்கப்பட்டு ஒதுங்கி இருக்கும் அல்லது ஒதுக்கப்பட்ட பெண் தலைமைகள் பற்றிய ஆய்வு ஒன்றை இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளில் மேற்கொண்டோம்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலிலே முதன் முதலாக பெண்களுக்கான கட்டாய இட ஒதுக்கீடானது (25 % ) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது , அதற்கு முற்பட்ட காலத்தில் மிக மிக குறைவான பெண்களே அரசியலில் ஈடுபட்டனர், ஆனால் இச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கணிசமான அளவு பெண் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சிமன்றத்தில் அதிகரித்திருந்தது .

2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம்

2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம்

 

 

ஆண்

 

பெண்

அக்கரைப்பற்று

06

02

ஆலையடிவேம்பு

16

04

திருக்கோவில்

15

02


  
மேற்படி உள்ளூராட்சி சபைகளிலே அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு என்பன சரியான சதவீதத்தில் பெண் உறுப்பினர்களை சபைக்கு உள்வாங்கி செயற்பட்டு இருப்பினும், திருக்கோவில் பிரதேச சபையில் மொத்தம் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டி உள்ளதால் , அதில் பெண்களுக்கான ஒதுக்கீடு 4 ஆசனங்களாக காணப்பட்டாலும், சபையானது இரு பெண் உறுப்பினர்களுடன் இயங்கியமை கவலையளிக்கின்றது. திருக்கோவில் பிரதேச சபையில் சட்டத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்த முடியாமையை இட்டு “ PAFFREL” அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்து , அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய , அவர்கள் தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்கள், உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்கொண்ட சவால்கள், சபை கலைக்கப்பட்ட பின்னர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய்வோம்.


தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்கள்….

திருக்கோவில், ஆலையடிவேம்பு சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் வேட்பாளர்கள், தேசிய கட்சிகளான, இலங்கை சுதந்திரக்கட்சி , ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர், இவர்கள் பிராந்திய கட்சிகளின் ஆதரவாளர்களிடமிருந்து, இனவாத ரீதியான கருத்துக்களை தாங்கள் எதிர்கொண்டதாகவும், சமூக வசைபாடல்களை தாங்கள் எதிர்கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர், அதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சபையிற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறான பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ளவில்லை என்றும், தங்கள் கட்சி உறுப்பினர்களே தங்களுக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்கொண்ட சவால்கள்….

அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் , பெண்களை அங்கே வரவுப்பதிவு பூர்த்தி செய்யும் நபர்களாகவே பயன்படுத்தி இருந்தனர், அவர்களுக்கு பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேச , உள்ளூராட்சி மன்றங்களில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என கணிசமான பெண்கள் தமது விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

சமூகத்தில் 50 விழுக்காட்டிற்கு அதிகமாக பெண்கள் இருந்தும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்சனைகளை உள்ளூராட்சி மன்ற கூட்டங்களில் எடுத்துரைத்து , தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமே, இருப்பினும் இதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் அக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களிடம் வினவியபோது, தாங்கள் அவ்வாறு ஓர நீதியாக நடக்கவில்லை என்றும் , பெண் உறுப்பினர்களுக்கான சுதந்திர‌த்தை தாங்கள் தடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
 
சபை கலைக்கப்பட்ட பின்னர் எதிர்கொண்ட சவால்கள்….. 

இலங்கை உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் சபையின் ஆயுட்காலமானது நான்கு வருடங்களாக வரையறுக்கப்பட்டு இருப்பினும், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகிய , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சபையின் ஆயுட்காலம் 2023 மார்ச் மாதம் வரை அதிகரிக்கப்பட்டமையால் சபையானது மேலும் ஒரு வருடத்தின் பின்னரே கலைக்கப்பட்டது,

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் தாங்கள், பதவியில் இருந்தபோது பெற்ற மரியாதை, சமூக மதிப்பு குறைவடைந்தமை, பதவிக் காலத்தில் கிடைத்த தொடர்புகள்/ வலையமைப்புகள் பதவியற்ற காலத்தில் குன்றியமை, தனிப்பட்ட அடையாளம் பதவியுடன் இணைந்திருந்ததால், பதவியற்றதும் அந்த அடையாளமும் மங்கியமையால் மீண்டும் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டிய சூழ்நிலை, "அரசியலை விட்டுப் போ", "வீட்டைப் பார்" என்பது போன்ற சமூக-குடும்ப அழுத்தங்கள் போன்றவற்றை தாங்கள் எதிர்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பெண்கள் , 2025 ஆம் ஆண்டு இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணங்கள்...

2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம்

2025 ஆம் ஆண்டில் மீண்டும் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை

 

 

ஆண்

 

பெண்

அக்கரைப்பற்று

06

02

00

ஆலையடிவேம்பு

16

04

01 (வேறு கட்சியில் போட்டியிடுகின்றார்)

திருக்கோவில்

         15               02

  00



இவ் விடயம் தொடர்பில் எமக்கு அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் காரணிகள் பிரதான காரணிகளாக அடையாளப்படுத்தப்படன

சமூக விமர்சனம், குடும்ப எதிர்ப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆர்வக் குறைபாடு, கட்சிகள் பெண்களை ஆண்களுடன் போட்டியிட வைப்பதில் தயக்கம் காட்டுகின்றமை , முஸ்லீம் சமூகத்தில் பாரம்பரிய மரபுகள் மற்றும் சமூகவியல் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன , தமிழ்ப் பெண்கள், சில இடங்களில் கலாசார அடிப்படையில் ஆதரவு பெற்றாலும், அதே சமயம் குடும்பத் தொல்லைகள் மற்றும் பாதுகாப்பு பாசறைகள் இல்லாமை காரணமாக அரசியல் வழிநடத்தலில் பங்குபற்ற முடியவில்லை, ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக செயற்படும் பெண் உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றால் , தங்கள் பதவிகளுக்கு ஆபத்து நிகழ்துவிடும் என சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் அஞ்சுகின்றனர் இது போன்ற காரணங்களால் மீண்டும் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். 

 இது தொடர்பில் நாங்கள் உள்ளூர் கட்சித் தலைவர்களிட‌ம் வினவியபோது, தேசிய கட்சியான இலங்கை சுதந்திரக்கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துவக் குழப்பம் காரணமாக, அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளமையால் , ஆலையடிவேம்பு , அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேசங்களில் தாங்கள் போட்டியிடவில்லை என இலங்கை சுதந்திரக் கட்சியின் திருக்கோவில் பிரதேச தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் , அதேவேளை மற்றுமொரு தேசியக் கட்சியான " ஐக்கிய தேசியக் கட்சியில்" ஏற்பட்ட பிளவினால் " ஐக்கிய மக்கள் சக்தி " என மேலும் ஒரு கட்சியாக பிளவடைந்தமையால் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றங்களால், புதிய தலைவர்களுக்கும் , பழைய‌ உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்பாடல் குறைந்தமை போன்ற காரணங்களினால் ஐக்கியதேசியக் கட்சி ஆலையடிவேம்பு , அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேசங்களில் தாங்கள் போட்டியிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் திருக்கோவில் பிரதேச தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். தேசியக் கட்சிகளைப் போல் பிராந்திய கட்சியான‌ தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் இயங்கிய தமிழ் கட்சிகளின் பிளவும் பெண் அரசியல் தலைமகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இச் சவால்களை எதிர்கொள்ளக் கூடியவாறு நாம் தீர்வு திட்டங்களை வகுத்து செயலாற்ற வேண்டும் எனவும் எம்மால் முன்வைக்கக் கூடிய சில‌ தீர்வுகள் தொடர்பில் இங்கே பார்க்கலாம்.

கட்சிகள் தரப்பில் பெண்களுக்கு குறைந்தபட்சமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சட்ட கட்டுப்பாடுகளை தேர்தல் திணைக்களம், உள்ளூராட்சி ஆணையாளார் மூலம் உத்தரவாதப்படுத்தல், சமூக விழிப்புணர்வைப் பெருக்கும் நிகழ்வுகள், பயிற்சி மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் அவசியம்., குடும்ப ஆதரவை உறுதி செய்யும் சமூக வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும், பெண்களுக்கு நிதியியல் மற்றும் செயற்பாட்டு ஆதரவை வழங்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவு திட்டங்களை உருவாக்கல், ஊடகங்கள் மூலம் பெண்களின் அரசியலின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

முடிவுரை: இந்த ஆய்வின் மூலம், அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகப் பெண்கள் உள்ளூராட்சி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதம் மற்றும் காரணிகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 2018-ல் ஏற்பட்ட முன்னேற்றம் 2025-ல் தொடரவில்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசு ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு, பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிறுபான்மை சமூகப் பெண்கள் அரசியலில் தொடர்வதற்கான சவால்கள் குறித்து இது POLICYMAKING மற்றும் GRASSROOTS ACTIVISM இரண்டிலும் பயனளிக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என நம்புகின்றேன்.
 

நன்றி
நி.பிரசாந்தன்