கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த மாணவிக்கு நீதிகோரியும், அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பிரபல தமிழ் பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் மற்றும் அம்மாணவியை பிரத்யேக வகுப்பில் பல மாணவர்கள் முன்னிலையில் முறையற்ற விதத்தில் பேசி அவமதித்தாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் 'ஜஸ்டிஸ் ஃபோர் அம்ஷிகா' (உயிரிழந்த மாணவியான அம்ஷிகாவுக்கு நீதி) எனும் ஹாஷ்டக்குடன் பலராலும் பதிவுகள் இடப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னிணயில் அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி வியாழக்கிழமை (8) கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாகவும், அம்மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவும் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்களை நடாத்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போராட்டங்களில் சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டது.
அதன்படி நேற்றைய தினம் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியிலும், அங்கு அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாகவும் காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான அமைதிப்போராட்டம் சில மணித்தியாலங்களின் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் பெருமளவானோரின் பங்கேற்புடன்கூடிய மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமாக மாற்றமடைந்தது.
பாலின பேதமின்றி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் 'நீதி வேண்டும், நீதி வேண்டும்: அம்ஷிகாவுக்கு நீதி வேண்டும்' எனும் கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம், படிப்படியாக கொழும்பு மாநகரின் முழுமையான கவனத்தைப்பெற்று, தேசிய ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியது.
நண்பகல் வேளையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பாடசாலை அதிபரை வெளியே வருமாறும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணிதபாட ஆசிரியரைக் கைதுசெய்யுமாறும், உயிரிழந்த மாணவிக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தருமாறும் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பியவாறும், 'பெண்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும் - வார்த்தைகளில் அல்ல, செயல்களில்' மற்றும் 'அம்ஷிகாவுக்கு நீதி' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், குறித்த கணிதபாட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய உரிமையாளரின் உருவப்படங்களை செருப்பால் அடித்து தமது கோபத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.
மழைக்கு மத்தியிலும் கலைந்து செல்லாமல், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்வதற்கான வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதுமாத்திரமன்றி பிற்பகல் ஒரு மணியின் பின்னர் டுப்ளிகேஷன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இவ்வாறு பாடசாலை வாயிலை மறித்து மாலை வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டாரவுடன் அவ்விடத்துக்கு வருகைதந்த மேல்மாகாண பதில் கல்விப்பணிப்பாளர், இவ்விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சின் சார்பில் தான் அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட கணிதபாட ஆசிரியர் புத்தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸாரிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்டவுடன் நாளைய (இன்றைய) தினத்துக்குள் அந்த ஆசிரியர் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவாதமளித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வறிவிப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லவில்லை. மாறாக இச்சம்பவம் தொடர்பில் மேலும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் பாடசாலை முன்றலில் இருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக அம்ஷிகாவுக்கு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள், அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி ஜனாதிபதியிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்கு அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் அனுமதிகோரினர். சிறிது நேர தர்க்கத்தின் பின்னர் அம்ஷிகாவின் நடன ஆசிரியை உள்ளடங்கலாக மூவரை ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளித்தனர்.