
மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்னாள் கடந்த 2021இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கை மட்டக்களப்பு நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான பிரபல சட்டத்தரணிகள் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதி சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் ஜனவரி 3ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி ஆஜரான நிலையில் நீதவான் அடுத்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வருடங்களுக்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.