பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் நடந்துக் கொள்ளும் விதம் பொய் - நாமல் ராஜபக்ஷ


பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் நடந்துக் கொள்ளும் விதத்தை பாருங்கள். பொய். 'எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் நீதிமன்றங்கள் தற்போது தீர்ப்பு வழங்குகின்றன. கைதுகளும் இடம்பெறுகின்றன' என்று நீதியமைச்சரால் எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தரவு பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்வதற்கு இந்த அரசாங்கம் திருத்த யோசனையை முன்வைத்துள்ளது.தரவு பாதுகாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்வாறு பேசுகிறது. அதற்கான தகைமை மற்றும் அறிவு இவர்களுக்கு உள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது.

அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது. நீதியமைச்சர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது எமது அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால் தான் இந்த கைதுகள் இடம்பெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் யாரை கைது செய்ய வேண்டும் என்பதை அரசாங்கமா தீர்மானிக்கிறது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. திரிபுப்படுத்தப்பட்ட காணொளியை பார்த்து விட்டு சபையில் வந்து பொய்யுரைக்க வேண்டாம். என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ. நீதியமைச்சர் எவ்வாறு நடந்துக் கொள்கிறார் என்று பாருங்கள். நீதியமைச்சர் குறிப்பிடுவதை போன்று, பொய், பைத்தியம் என்று கருதுவோம். நாட்டு மக்கள் வெகுவிரைவில் இவர்களின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்வார்கள் என்றார்.