பண்டாரநாயக்க விமான நிலைய பிரதான திட்டத்துக்கு அனுமதி



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடவியலாளர் மாநாடு புதன்கிழமை (11) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பைச் செய்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரிப்பதற்காக ஆலோசனை நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி முறையைக் கடைப்பிடித்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.

குறித்த விலைமனுக்களின் மதிப்பீட்டின் பின்னர், அதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய கம்பனி ஒப்பந்த நிபந்தனைகளுக்கமைய செயற்படாமையால் அமைச்சரவை அங்கீகாரத்தின் மூலம் குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, பெறுகைச் செயன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிதாகக் கோரப்பட்ட பெறுகைக்காக நெதர்லாந்து எயார்போர்ட் கன்சல்டன்ஸ் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற M/s Haskoning DHV Netherland B.V இனால் மாத்திரம் தனியான விலைமனு சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை பெறுகைக் குழுவால் குறித்த முன்மொழிவு மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அதற்கான ஆலோசனை ஒப்பந்தத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.