பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன் - தேசபந்து தென்னக்கோன்




“2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன்” என தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவில் தெரிவித்துள்ளார்.

தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த போதே தேசபந்து தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில்,

“2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னை கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.”

“பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் நான் குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் தான் இருந்தேன்.”

“ஆனால் பொலிஸார் என்னை தவறான இடங்களில் தேடினர்.”

“குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தினேன்.”

“நான் அந்த வீட்டில் தனியாக தான் இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் சார்பில் 15 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. விசாரணை குழு நாளை வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் கூடும்.