தேசபந்து தென்னகோனுக்கும் திலிப பீரிஸிற்கும் இடையில் கடும் தர்க்கம்



உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸிற்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது.

'தேசபந்து தென்னகோன் பாதாள குழுவை காட்டிலும் பயங்கரமானவர், ஹரக்காட்டாவும் அச்சமடைவார்' என மேலதிக சொலிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் குற்றஞ்சாட்டிய நிலையில்,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 'இவர் என்னை மிகவும் கீழ்த்தரமான முறையில் இந்த குழுவிலும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திலும் பேசுகிறார், அவசியமாயின் எனக்கும் இவரை பற்றி குறிப்பிட முடியும்' என்று குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார்.

பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் குற்றச்சாட்டை முன்வைத்த போது, இதற்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பில் குழுவில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய வீரவிக்கிரம இந்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிக்கான அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் அவரது துர்நடத்தை ஆகிய காரணிகளை உள்ளடக்கிய வகையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழு செவ்வாய்க்கிழமை (2) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன, நீதியரசர் (ஓய்வுநிலை) என்.பி.இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் குழு கூடியது

இதன்போது மாத்தறை –வெலிகம துப்பாக்கிச்ச10ட்டு சம்பவத்துக்குரிய 31 சாட்சியாளர்களில் 1 முதல் 22 வரையான சாட்சியங்களை குழுவிற்கும் மற்றும் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தரப்புக்கும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் மேற்கொண்டிருந்தார்.

கடந்த அமர்வின் போது தான் குறிப்பிட்ட ஒரு விடயத்தை ஊடகம் ஒன்று திரிபுப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.இதனூடான தனக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பு முயற்சிப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார்.

தடுப்புக்காவலில் உள்ள ஹரக்கட்டாவுடன் ஒருசில பொலிஸ் அதிகாரிகள் தொடர்புக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினால் தனது உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் குழுவில் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த நீதியரசர் பி.பி சூரசேன, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து குழுவினால் அறிவிக்க முடியாது என்றும், குழுவின் செயற்பாடுகளை அறிக்கையிடும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் வலியுறுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கும், மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸூக்கும் இடையிர் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பொலிஸ்மா அதிபரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று குறிப்பிடுவதால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் என்று சட்டத்தரணி சஞ்சய வீரவிக்ரம இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி 'இவர் பாதாள குழுவை காட்டிலும் பயங்கரமானவர், ஹரக்காட்டாவும் அச்சமடைவார்' என்று கடுமையாக சாடினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 'இவர் என்னை மிகவும் கீழ்த்தரமான முறையில் இந்த குழுவிலும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திலும் பேசுகிறார், அவசியமாயின் எனக்கும் இவரை பற்றி குறிப்பிட முடியும்' என்று குறிப்பிட்டார்.

முன்வைக்கப்படும் அனைத்து கூற்றுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.ஒழுக்கமான முறையில் குழுவில் நடந்துக் கொள்ளுமாறு குழுவின் தலைவர் நீதியரசர் பி.பி.சூரசேன இதன்போது வலியுறுத்தினார்.

இதன்போது தனது கருத்தை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ்' ஒருசில சாட்சியங்களை பிரதிவாதி தரப்புக்கு வழங்க முடியாது'என்று குறிப்பிட்டார்.

இருதரப்பின் கருத்துக்களையும் ஆராய்ந்த சிறப்பு குழு, பிரதிவாதி தரப்புக்கு ஒருசில சாட்சியங்களை பரிசீலனை செய்வதற்கு அவற்றை வழங்குமாறு அறிவுறுத்தியது.