பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் இல்லை ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !


அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தை திசை திருப்புவதற்காகவும், அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன. எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றார்.