இஸ்ரேலுக்கு பயணிக்கும் திட்டம் உண்டா? வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்பைப் பேணுவது இன்றியமையாதது - வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தல்




இலங்கையில் உள்ள தனிநபர்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுடனும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடனும் நெருங்கிய தொடர்பைப் பேணவேண்டியது மிக அவசியம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் தற்போது ஓரளவு தணிந்திருக்கும் பதற்றநிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:

ஈரான் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய நிலைவரத்தை நாம் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் மோதல்களைக் கையாள்வதில் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கே முன்னுரிமை அளித்துள்ளோம். அதற்கமைய அவசியமான சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதை முன்னிறுத்திய அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இஸ்ரேலின் தற்போதைய நிலைவரம் சுமுகமானதாகத் தென்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்நிறுத் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எதிர்வரும் நாட்களில் பொதுக்கூட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இலங்கையில் உள்ள தனிநபர்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுடனும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடனும் நெருங்கிய தொடர்பைப் பேணவேண்டியது மிக அவசியமாகும்.

அத்தோடு இஸ்ரேலுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் வரும் கோரிக்கைள் குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும். சமகால சூழ்நிலைகள் மற்றும் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் விநியோகத்தைப் பொறுத்தமட்டில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எமது அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையை முழுமையாக அறிந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம்செலுத்திவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.