திருகோணமலையில் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்




வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில்,

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கிறது.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறி, பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.

அத்துடன் நீண்ட நாட்களாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் தராமல் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.

கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலயத்தில் காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் நீள்கிறது என்று குரல் எழுப்பினர்.