2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கைது !


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவரும் கேகாலை - யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவரும் ஆவார்.

சந்தேக நபர்களான வர்த்தகர்கள் இருவரும் துபாயிலிருந்து நேற்று 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர்களான வர்த்தகர்கள் இருவரும் விமான நிலையத்தின் (green channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயனற் போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, வர்த்தகர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 116,200 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 581 காட்டுன்களும் 117 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் ஆகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.