அறுகம்பேயில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது.

26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.