மட்டக்களப்பில் இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக மீட்பு


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கிரான்குளத்தைச் சேர்ந்தவர் என காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கூலி தொழிலை மேற்கொண்டுவரும் குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழமைபோல வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.