அர்ச்சுனாவிற்கும் பிரதேச சபை பெண் உறுப்பினருக்கும் இடையே முற்றிய கடும் வாக்குவாதம்


வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் கூட்டமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இரண்டு பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள், "நல்லூரை இடிக்கும்படி கூறினீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, "தையிட்டியில் போராட்டம் செய்கின்ற கூட்டம் நீங்கள்தான்; இருந்து குழப்புங்கள்" என்று கூறிய எம்.பி., பெண்கள் என்றும் பாராமல் அநாகரிகமான சொற்களால் அவர்களைத் திட்டியுள்ளார்.

இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் "சேர், நீங்கள் மரியாதையாகப் பேசுங்கள்" என்று கூறி விவாதித்தபோது, அவர்களைத் தாக்கும் பாணியில், குரலை உயர்த்தி மிரட்டியவாறு அவர்களின் அருகே சென்றதை அவதானிக்க முடிந்தது.