யானைக்கு தீவைத்த சந்தேநபர்கள் விளக்கமறியலில் !


சீப்புகுளம் பகுதியில் காட்டு யானையொன்றிற்கு எரிகாயத்தை ஏற்படுத்தி துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று அநுராதபுரம் மேலதிக நீதவான் லக்மாலி ஹெட்டியாராச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குறித்த காட்டு யானையை தீயினால் எரித்து துன்புறுத்தும் காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த 42, 48 மற்றும் 50 வயதுடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சித்திரவதைக்கு உள்ளான அந்த காட்டு யானை சில நாட்களுக்கு முன்னர் சீப்புகுளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

யானையின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புடன், தீயினால் எரிக்கப்பட்டபோது ஏற்பட்ட கடும் அச்சம் காரணமாகவே யானை உயிரிழந்துள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.