பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு



நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போது தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடாத்தப்படவிருந்த 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப் பரீட்சையை 2026 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இடர் நிலைமைக்குட்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தமது பாடசாலை அதிபருக்கு அறிவித்தல் வேண்டும். அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்குட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவித்தல் வேண்டும் என பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.