
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் இந்த ரீட் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்களை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் இல்லை என மனுதாரர்களான தேரர்கள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு இருந்தும் தங்களை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அத்தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கும் ரீட் கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.









.webp)

.jpeg)
