"ஷிராந்தி ராஜபக்சவின் கோரிக்கை நிராகரிப்பு: இன்றைய தினமே வாக்குமூலம் வழங்க நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு."


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் தம்மால் வர முடியாது எனவும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்குமாறும் தனது சட்டத்தரணி ஊடாக அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும், ஷிராந்தி ராஜபக்சவை இன்றைய தினமே மீண்டும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.