கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.
இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கச்சத்தீவுக்கான படகுச் சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும்.
இதேவேளை கச்சத்தீவுக்கு குழுவாக / தனியாக படகில் வரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களை தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு படகு மூலம் பயணிப்போர் 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னர் கச்சத்தீவை அடையும் வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.












.jpeg)