இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !



இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட விசேட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது. சட்டத்தை சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும் சமூகமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது. உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. 

அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்” எனத் தெரிவித்தார்.