கல்லாறு, காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல வருடங்களாக செயலிழப்பு ; மீனவர்கள் கடும் விசனம் !


மட்டக்களபு மாவட்டத்தில், தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல இலட்சம் ரூபா செலவில் கல்லாறு மற்றும் காத்தான்குடி கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல வருடங்களாக செயலிழந்து, பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதன் காரணமாக, மீனவர்கள் தமது படகுகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பல மைல் தூரம் பயணித்து கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) நிதி அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் மொத்தமாக 9 மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவை மீனவர் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அவற்றில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மீனவர் சங்கங்களினால் தனியார்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு சில காலம் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குத்தகை அடிப்படையில் பொறுப்பேற்றவர்கள் குறுகிய காலத்திற்குப் பின்னர் நிலையங்களை இயக்க முடியாமல் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மோட்டார் உள்ளிட்ட இயந்திரப் பாகங்கள் திருடப்பட்டதுடன், கட்டிடங்கள் பாழடைந்து, எரிபொருள் தாங்கிகள் துருப்பிடித்து, மரங்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கின்றன.

அதேவேளை, கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கட்டிடம் மதுபானம் அருந்துவோரின் கூடமாக மாறியுள்ளதுடன், அங்கு இருந்த இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் திருடப்பட்டு, கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இதன் விளைவாக, மீனவர்கள் தமது இயந்திரப் படகுகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பல மைல் தூரம் சென்று எரிபொருளை பெற்றுக் கொண்டு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

யு.என்.டி.பி நிறுவனம் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல இலட்சம் ரூபா செலவில் அன்பளிப்பாக நிர்மாணித்த இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களம் இதுவரை எந்தவொரு தீர்மானமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வெளியில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் ஏதேனும் மறைமுக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் நிலவுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, கடந்த 15 ஆண்டுகளாக செயலிழந்து காணப்படும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை மீண்டும் இயக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளனர்.