சிவனொளிபாதமலை வனப்பகுதியில் திடீர் தீப்பரவல் !


சிவனொளிபாதமலை உச்சிக்கு எதிரே அமைந்துள்ள சிவனொளிபாதமலை வனப்பகுதிக்குச் சொந்தமான மலைத்தொடரில்  (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும், அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசமானது அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர அமைப்புகளைக் கொண்ட, பல்லுயிர் தன்மையில் மிக உயர்ந்த ஒரு உணர்திறன் மிக்க வலயமாகும்.

தற்போதைய நிலைமையின் காரணமாக, இந்தப் பெறுமதிமிக்க சுற்றாடல் கட்டமைப்புக்கும், உயிரினங்களுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீப்பரவல் மிகவும் கடினமான மலையுச்சியொன்றிலேயே ஏற்பட்டுள்ளதால், அந்த இடத்தை அடைந்து தீயைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தவொரு குழுவினராலும் முடியவில்லை என  செய்தியாளர் மேலும் தெரிவித்தார்