நாட்டில் இரு வேறு இடங்களில் கோர விபத்துக்கள் : இருவர் பலி - 5 பேர் காயம்


நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, பாணந்துறை - இரத்தினபுரி வீதியின் குளுபன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) முச்சக்கரவண்டி ஒன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஹிங்குராக்கொடை - கல்முனை வீதியின் 07ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை ஹிங்குராக்கொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றிலும், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் என நால்வர் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குராக்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.