அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கல் - நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு



மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடிக்குத் தீர்வாக, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர முறையில் முன்னெடுப்பதற்கான புதிய வழிகாட்டல்களை டிஜிட்டல் பொருளாதார மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து வெளியிட்டுள்ளது.

தேசிய எரிபொருள் கையிருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், வலுசக்தி முகாமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அலுவலக சேவைகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரச சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச அலுவலகப் பணிகளை முடிந்தவரை தொலைதூரச் சேவை முறையின் கீழ் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச சேவைகளை வினைத்திறனாக வழங்குவது தொடர்பான இடைக்கால வழிகாட்டல்கள் அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை https://mode.gov.lk/docs/guidelines என்ற இணையத்தள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.