மோட்டார் காப்புறுதி தொடர்பான முக்கிய அறிவிப்பு : இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை


நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் மோட்டார் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் விதிமுறைகளை மீறிய செயல்பாடுகள் இடம்பெறுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி பெறுநர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி காப்புறுதி ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் உரிய உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே சேவைகளைப் பெற வேண்டும், குறைந்த கட்டணத்தில் காப்புறுதி வழங்கப்படும் என கூறி தவறான தகவல்களை வழங்கும் சட்டவிரோத இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும், காப்புறுதி ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து முழுமையான தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் 1338 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1338 என்ற USSD சேவையின் மூலமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

காப்புறுதி பெறுநர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும், தவறான வழிகளில் ஈடுபடுவது சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் நம்பகமான மற்றும் சட்டபூர்வமான சேவைகளை மட்டுமே பயன்படுத்தி, மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.