தெனியாய வலயத்தின் நான்கு பாடசாலைகள் மூடல்...!


பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை நாளை (08) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மெத்தியூ இருமொழி பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், பிள்ளைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறச் செய்யுமாறும் சுகாதாரப் பிரிவினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.