ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி. பாராளுமன்றில் கோரிக்கை


ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட்டு, ஏறாவூர் நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள புதிய காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை (7) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பொறுப்பான அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபைத் தவிசாளருமான எம்.எஸ் நளீம் இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அதற்கான அனுமதியும் பெறப்பட்டது.

அலிகார் தேசியப் பாடசாலையில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், போதுமான கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு குறித்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்குமாறு உரிய அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.