-Picsart-AiImageEnhancer.jpeg)
களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம், களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வெள்ளை நிற சிறிய ரக வேன் (Van) ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபர்கள் வந்த வாகனம் என்றும், குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இன்று காலை களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வந்த கார், தெபுவன - நேபட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தெபுவன, நேபட தபால் நிலையத்திற்கு அருகில் வைத்து அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இந்த சம்பவத்துடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் குறித்த வேனும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












