கபில சந்திரசேன மரணம் - வீட்டின் சிசிரிவி காட்சிகள் பதிவாகவில்லை என நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அறிவிப்பு


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகளில், அவர் வசித்து வந்த வீட்டின் சிசிரிவி காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (19) செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த விபரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, மரணம் சம்பவித்த வீட்டிற்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் ஊடாக நுழைய முடியும் என்றபோதிலும், கடந்த 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வெளிநபர்கள் எவரும் அங்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், உயிரிழந்தவர் வசித்து வந்த வீட்டிலிருந்த சிசிடிவி இயந்திரங்களிலும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக, சிசிடிவி கமராக்களை பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி அமைப்பின் DVR இயந்திரங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெற நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.

மரணம் நேர்ந்த இடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வகையான 09 மாத்திரைகளும், மற்றொரு வகையான 11 மாத்திரைகளும் அடங்குவதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவருக்கும் வீட்டின் ஊழியர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்காததால், அதற்காக மீண்டும் நீதிமன்றில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதவானுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.

இன்றையதினம் சாட்சியமளிப்பதற்காக பல சாட்சிகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அழைத்திருந்த போதிலும், அவர்கள் அனைவரினதும் சாட்சியங்களை ஒரே நாளில் பதிவு செய்ய முடியாது என்பதால், தேவையற்ற நபர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சாட்சிகளில் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதால் அவர்களைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்ட நீதவான், இந்த மரணம் தொடர்பான சாட்சி விசாரணையை ஒத்திவைத்தார்.