தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் : சபையில் சஜித் கண்டனம்


இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (7) பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, குறித்த சம்பவம் தொடர்பாக விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவர முற்பட்டபோது, அது ஒழுங்கு பிரச்சினையல்ல என்றும், சபை நடவடிக்கைகள் தொடர்பான விடயத்தையே ஒழுங்கு பிரச்சினையில் முன்வைக்க முடியும் என்றும் கூறி அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கூறியதாலேயே சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சியினர் சபாநாயகருடனும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவுடனும் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மஸ்கெலியா மொக்கா என்ற தோட்டத்தில்.... என்று கருத்துக்களை கூற ஆரம்பித்தபோதே, குறுக்கிட்ட சபாநாயகர், இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல. சபை நடவடிக்கைகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருந்தாலே ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முடியும் என்று சபை நடவடிக்கைகளை தொடர்வதற்கு சபை முதல்வருக்கு உத்தரவிட்டார்.

இதன்போது சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாய்கக, அவசர பிரச்சினை என்றால் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் அல்லது இடைக் கேள்விகள் மூலம் முன்வைத்திருக்க முடியும். ஆனால் இப்போது விவாதம் உள்ளது இவர்கள் மலையக மக்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கக்கூடாது என்று கூறியவர்கள். மனோ கணேசன் போன்றோர் இவர்களுடன் அன்றி எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடருமாறு சபை முதல்வருக்கு தொடர்ந்தும் அறிவித்தார்.
 

சமீபகாலமாக இரத்தினபுரி, மஸ்கெலியா மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் இத்தகைய அச்சுறுத்தலான சூழல் நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளர் ஒருவர், தனது காணியில் வீடு கட்டியமையினால் ஆத்திரமடைந்த தோட்டப் பாதுகாப்பு உத்தியோகத்தரால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை நேற்று அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

இத்தகைய அடக்குமுறைகள் தற்போது ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மஸ்கெலியா மாவட்டத்தின் மொக்கா தோட்டப் பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் டெவோன் தோட்டப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு எதிராக இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என வலியுறுத்திய அவர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

எனவே, இச்சம்பவங்கள் குறித்து உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.