உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார் அதிரடிச் சோதனை - முறைப்பாடுகளுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

வீதி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் குழாய்களைக் கொண்ட வாகனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் முறையான தகுதிச் சான்றிதழ்கள்இன்றி, ஆபத்தான முறையில் உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இடம்பெற்ற பஸ் விபத்துகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலான பஸ்கள் உரிய அனுமதி இன்றி உருமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும், வீதி தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகளின்படி, வாகனங்களில் ஆபத்தான அல்லது அனுமதி பெறாத பாகங்களைப் பொருத்துதல், அனுமதியின்றி வர்ண விளக்குகள் அல்லது மின்னும் விளக்குகளை பொருத்துதல், தரமற்ற மற்றும் அதிக சத்தமிடும் ஒலிப்பான்களை பயன்படுத்துதல், உற்பத்தியாளரின் அசல் நிறம், வடிவம் அல்லது வாகனத்தின் கட்டமைப்பை சட்ட அனுமதி இன்றி மாற்றுதல், அனுமதியின்றி சித்திரங்கள், விளம்பரங்கள் அல்லது உருவங்களை வாகனத்தில் ஒட்டுதல், அதிக சத்தத்தை உருவாக்கும் வகையில் சைலன்சர்களை மாற்றுதல் அல்லது மேலதிக பாகங்களைப் பொருத்துதல் குற்றமாகும்.

எனவே, அதிகப்படியான கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.

வாகனத்தின் இலக்கம், திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பவும்.

உயிர்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் நாடு முழுவதும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.