சட்டபூர்வ ஸ்பாக்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம் : இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !


அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயிற்சிச் சான்றிதழ்களைக் கொண்ட உடல் பிடிப்பு நிலையங்கள் (ஸ்பா) மீது பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இத்தகைய சுற்றிவளைப்புகள், பெண் ஊழியர்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் சங்கத்தின் தலைவருக்குச் சொந்தமான நிலையத்துக்கு திட்டமிட்ட முறையில் தீ வைக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் வெள்ளிக்கிழமை (03) எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைக் கையளித்துள்ளனர்.

முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத பெரேரா மேலும் தெரிவிக்கையில்:

'சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமங்கள் மற்றும் முறையான சிகிச்சை அளிப்பவர் சான்றிதழ்களுடன் பணிபுரியும் நிறுவனங்களின் பெண் ஊழியர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இலங்கை மன்றம் நிறுவனம் மற்றும் இலங்கை திறந்தப்பல்கலைக்கழகம் ஆகியவற்றால் வழங்கப்பட்ட பயிற்சிச் சான்றிதழ்களைக் கொண்ட இந்த ஊழியர்களுக்கு இந்த நாட்டில் வேலை செய்ய முடியாவிட்டால், அவர்கள் எங்கு செல்வார்கள்? அரசாங்க நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட சான்றிதழை பொலிஸார் பிடுங்கி எறிகிறார்கள்.

எமது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றத்தை நாட நாம் எதிர்பார்த்துள்ளோம். இந்த நிறுவனங்களுக்கும் ஆயுர்வேத திணைக்களத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோதனைகளை சுற்றுலா சபையின் அதிகாரிகளுடன் இணைந்துதானே செய்ய வேண்டும்? தற்போதைய அரசாங்கத்தை அசௌகரியத்துக்;கு உள்ளாக்க யாரோ முயற்சிப்பதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது.' என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நலின் குமார மேலும் தெரிவிக்கையில்:

'கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலவத்துகொட பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தோம். அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட இணையொளி அலைவரிசையில் முகத்தை மூடியபடி பேசிய நபர் ஒருவர், இந்த நிறுவனங்களுக்குத் தீ வைக்க வேண்டும், இவற்றை டோசர் செய்ய வேண்டும் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

இந்தத் தொழிலை நம்பி இந்த நாட்டில் 100000 வரையான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறான பின்னணியில், நேற்று முன்தினம் எமது சங்கத்தின் தலைவருக்குச் சொந்தமான வத்தளை பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்று முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு முன்பும் ஒரு நிறுவனம் தீப்பற்றியது. தலைவரின் நிறுவனத்துக்குத் தீ வைக்கப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. பொலிஸ் மா அதிபர் இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும்.' என்றார்.