மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை - சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்



கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று புதன்கிழமை (1) மாலை மட்டக்களப்பில் உள்ள சில மதுபானசாலைகளை முற்றுகையிட்டு சட்டத்துக்கு முரணான வகையில் விற்கப்படும் ஒரு தொகை மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

விசேட பொலிஸ் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாடு பூராகவும் இடம்பெற்றுவரும் இந்த சோதனை நடவடிக்கையில் குறித்த மதுபான போத்தல்கள் அதிகளவானவை மட்டக்களப்பில் இருந்து விநியோகிக்கப்படுவதாக கண்டறியப்பட்டதையடுத்து இந்த சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் முற்றுகையிட்டு மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மது வரி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று சம்பவ இடத்தில் மதுபான விற்பனை நிலையங்களை சோதனையிட்ட விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.