எதனையும் ஒடுக்குமுறை ஊடாகவே செய்ய நினைக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் முன்நிற்போம் - சஜித்


 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயலற்ற, திறமையற்ற மற்றும் வெற்றுப் பேச்சுக்களைப் பேசும் ஒரு அரசாங்கமாகும். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சர்வாதிகாரத்தைப் பரப்பி, தனிநபர் ஆட்சியை உருவாக்குவது மட்டும்தான். எதனையும் ஒடுக்குமுறை ஊடாகவே செய்ய நினைக்கும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தொழிற்சங்க ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டம் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:

நாட்டில் இன்று தினசரி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1000 வரை அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியுள்ளதுடன் 32 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 14 நிர்வாக மாவட்டங்களில் உள்ள 538 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலைமை குறித்து பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. 'பிரெட்டோ சுட்டெண்' அபாயக் கட்டத்தை எட்டியபோதே அரசியல் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. எனினும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாததன் விளைவாகவே, இன்று டெங்கு அரக்கன் மீண்டும் தலைதூக்கியுள்ளான்.

இந்தத் தருணத்தில் சுகாதாரத் துறையினர் மீது மாத்திரம் விரல் நீட்டுவதில் பயனில்லை. அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் உரிமைகளுக்காகப் பேசிய கடுவலை நகர மேயர், இன்று கடுவலை பகுதியை இலங்கையிலேயே மிகவும் அசுத்தமான மற்றும் டெங்கு குகையாக மாற்றியுள்ளார்.

தற்போதைய உள்ளூராட்சி மன்றங்கள் செயலற்றுப் போயுள்ளன. நாட்டில் மாகாண சபைகள் இயங்கிக்கொண்டிருந்தால், இதை விட வெற்றிகரமான முறையில் டெங்குவை எதிர்கொண்டிருக்க முடியும். ஆனால், இந்த அரசு திட்டமிட்டே மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போட்டுள்ளது.

இந்த அரசாங்கம் செயலற்ற, திறமையற்ற மற்றும் வெற்றுப் பேச்சுக்களைப் பேசும் ஓர் அரசாங்கமாகும். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சர்வாதிகாரத்தைப் பரப்பி, தனிநபர் ஆட்சியை உருவாக்குவது மட்டும்தான். எதனையும் ஒடுக்குமுறை ஊடாகவே செய்ய நினைக்கும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் முன்நிற்போம் என்றார்.