
தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து புதிய அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல்கள், இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மலையக மக்களின் காணி உரிமைகள் குறித்து கலந்துரையாடினர் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன்,
தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து, அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று (3) திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது தொடர்பான வாக்குறுதிகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, சிறிய தாமதம் ஏற்பட்ட போதிலும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், மாகாண சபை தேர்தல்கள் இதுவரை நடத்தப்படாமை குறித்து கேள்வி எழுப்பியபோது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தத் தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அது பயன்படுத்தப்படுவதாகவும் தாங்கள் சுட்டிக்காட்டியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, தெரிவுக்குழுவின் தலைவருடன் இது குறித்து நேரடியாக ஆலோசித்து உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்தினராலும் ஏனைய அரசு நிறுவனங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கொள்கை ரீதியாக அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உடன்பட்டிருந்தாலும், நடைமுறையில் தாமதம் நிலவுவது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், நிலங்களை விடுவிப்பதில் உள்ள தடைகள் குறித்து இராணுவத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றுடன், மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை இன்னமும் கிடைக்கப்பெறாத நிலைமை குறித்தும், தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்ட போதிலும், அதற்கான முறையான பதில்களோ தீர்வுகளோ இன்னமும் எட்டப்படவில்லை என எம். ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.










.jpg)


