மட்டக்களப்பு நகர மண்டபத்தில் ஜீவகுமாரனின் மூன்று நூல்கள் அறிமுகம்


(சிவம்)
யாழ் சங்கானையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவகுமாரனின் மூன்று நூல்கள் அறிமுக விழா மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (18) இடம்பெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இ அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்ட கலைஞர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்த நூல்களின் அறிமுக விழா பேராசிரியர் எஸ். மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கவிஞர் வி. ஐமக்கல் கொலின் நிகழ்த்தினார்.

ஜீவகுமாரனின் கதைகள் - எழுத்தாளர் திருமலை நவம், கடவுச் சீட்டு (நாவல்) – பேராசிரியர் செ. யோகராசா, ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்- அ.ச. பாய்வா ஆகியோர் நூல்களின் விமர்சன உரையை நிகழ்த்தினர்.

இதன்போது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வில் ஜீவகுமாரனின் மொழிபெயர்ப்பு நூலான “ இப்படிக்கு அன்புள்ள அம்மா” நூலுக்கான விருதை அப்போது அவர் சமூகமளிக்காத காரணத்தினால் எழுத்தாளர் ச. அருளானந்தம ஜீவகுமாருக்கு இதே நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.