உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகளை திறந்து விவசாயிகளிடம் அடிவாங்கிய அதிகாரிகள்! ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்!

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு மேலதிக மாவட்ட நீதிபதி முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் ஒத்திவைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு, உன்னிச்சைக்குளம் வான் கதவுகளை நீர்ப்பாசன அதிகாரிகள் திறந்துள்ளனர்.

இவ்வாறு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டமையினால் தங்களுடைய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை இரு விவசாயிகளும் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் செய்த முறைபாட்டை தொடர்ந்து பொலிஸார் விவசாயிகளை கைது செய்து (ஞாயிற்றுக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

புதன்கிழமை காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரான பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன், தமக்கான நிவாரணங்களை உரியவர்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

வாவிக்கரை வீதியில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியானது அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக உன்னிச்சைக்குளம் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசன குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. உன்னிச்சைக் குளத்தினை சிறந்த முறையில் நீர்ப்பாசன திணைக்களம் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே இந்த நஷ்டம் ஏற்பட்டதாக இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.