புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளோடு முடிந்து போகவில்லை உங்கள் பயணம் !

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐந்து வருடங்களாக ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி, ஒன்றாக உண்டு, ஒன்றாகக் குதூகலித்துத் திரிந்த எங்கள் மாணவர்கள் வெட்டுப்புள்ளி என்ற கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

ஒரு பக்கம் வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளியைப் பெற்ற மாணவர்கள், மறுபக்கம் வெட்டுப்புள்ளியைத் தாண்டாத மாணவர்கள். மொத்த மாணவர் தொகையில் குறைவான வீதத்தினரே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெற்றிருப்பர். கூடிய வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியிருக்க மாட்டார்கள். இதுவே ஒவ்வொரு வருடமும் நிகழும். ஏனெனில் குறித்த சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டுவதற்கேற்ற வகையில்தான் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதனால்தான் இந்த வெட்டுப்புள்ளிகள் வருடாவருடம் மாற்றப்படுகின்றன.



இது இவ்வாறு இருக்க எங்கள் சமூகம் இந்தப் பிஞ்சு மாணவர்களை வெட்டுப்புள்ளிகளை வைத்துக்கொண்டு சித்தியெய்திய மாணவர்கள், சித்தியெய்தாத மாணவர்கள் என இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தப்பிரிப்பு முற்றிலும் தவறானது. பல புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி 1 வினாத்தாளில் 35 புள்ளிகளும் பகுதி 2 வினாத்தாளில் 35 புள்ளிகளும் என மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றாலே அம்மாணவர்கள் ஆரம்பக்கல்வியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து இடைநிலைக் கல்விக்குத் தகுதி பெறும் வெற்றியாளர். இது கூட வெற்றிதான்.

ஆனாலும் புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்குவதற்கும், விரும்பிய பாடசாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

எனவே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெறும் மாணவர்கள் அடையும் நன்மைகள் இரண்டு தான். ஒன்று புலமைப்பரிசில்  உதவித்தொகை கிடைக்கும். இரண்டாவது விரும்பிய பாடசாலையில் அனுமதி கிடைக்கும். இதில் அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை கிடைக்காது. இதே வேளை வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளியைப் பெறாத மாணவர்கள் அரசினால் வழங்கப்படும் உதவித்தொகையினைப் பெறும் தகுதியினை இழப்பர். அத்துடன் விரும்பிய பாடசாலைகளில் அனுமதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவர். இதுதான் விடயம்.

ஆனால் எமது சமூகத்தில், எமது சமூகத்தில் என்று சொல்வதை விட முழு இலங்கையிலும் வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளிகளைப் பெறாத மாணவர்கள் கல்வியில் மிகப் பின்தங்கியவர்களாகப் பார்க்கின்றனர். அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விட்டதாக உணர்த்தப்படுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெற்ற மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களாகப் பாராட்டப்படுகின்றனர், பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர். இன்னும் சில பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றனர். இது அடுத்த ஆண்டுகளில் புலமைப்பிரிசில் எழுத இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும், கஷ்டப்பட்டுப் படித்து வெட்டுபு;புள்ளியைத் தாண்டிப் பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும். எனவே இவற்றைத் தவிர்க்க முடியாது. பிழையென்றும் கூறமுடியாது.

அதேநேரம் வெட்டுப்புள்ளியைத் தாண்டாத மாணவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அவர்கள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். தாம் தோற்றுப் போனவர்கள், தமது எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விட்டது என்றவாறான உணர்வுகளை மாணவர்கள் பெறும்வகையான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறத்தவறிய மாணவர்களைத் துவண்டு போகாமல் பார்த்துக் கொள்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.
 அவர்களும் உங்கள் பிள்ளைகள் தான். அவர்களுக்கும் நீங்கள்தான் கற்பித்தீர்கள். அவர்களுக்கு இது ஒன்றும் பாரிய பின்னடைவு அல்ல என்பதைப்புரிய வையுங்கள். அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் மீது வெறுப்புக்காட்டாதீர்கள். நீங்கள் வெறுப்புக் காட்டுவது உங்கள் தற்பெருமைக்காகவும், உங்கள் வரட்டுக் கௌரவத்திற்காகவும் மட்டுமே என்பதாக உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தாது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பாரிய வேறுபாடு இல்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். வெட்டுப் புள்ளியைப் பெற்றவன் வெற்றியாளன். வெட்டுப்புள்ளியை விட ஒரு புள்ளியைக் குறைவாகப் பெற்றவன் தோல்வியாளன். இங்கு வெற்றியாளனுக்கும் தோல்வியாளனுக்கும் இடையில் ஒரு புள்ளிதான் வித்தியாசம். எனவே உங்கள் பிள்ளைகளை மிகக் குறைவானவர்களாக எடை போடாதீர்கள்.

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர் அடுத்த ஒலிம்பிக் வரை உலகிலேயே மிக வேகமான மனிதர் என அழைக்கப்படுவார். அவருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்.
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? ஒலிம்பிக்கில் 100 மீற்றரில் முதலாம் இடம் பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பெற்றவருக்கும் இடையில் மில்லி செக்கனில்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இரண்டாம் இடம் பெற்றவர் உலகத்தால் அதிகம் பேசப்படுவதில்லை. யோசித்துப் பாருங்கள், முதலாம் இடம்பெற்றவரை விட இரண்டாம் இடம் பெற்றவர் அவ்வளவு குறைந்தவர் அல்ல. அவருக்கும் இவருக்கும் இடையில் மில்லி செக்கன்தான் வித்தியாசம். எனவே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெறாத உங்கள் பிள்ளைகள் மிகவும் குறைந்தவர்கள் அல்ல. நீங்கள் ஏன் சோர்ந்து போக வேண்டும். இன்னும் ழுஃடு பரீட்சை, யுஃடு பரீட்சை, பல்கலைக்கழகங்களில் பல பரீட்சைகள், தொழில் தகைமைக்கான பரீட்சைகள் என பல பரீட்சைகள் உங்கள் பிள்ளைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றன. அப்பரீட்சைகளோடு ஒப்பிடும் போது புலமைப்பரிசில் பரீட்சை முடிவு என்பது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இப்பரீட்சையிலேயே உங்கள் பிள்ளை துவண்டு போனால் ஏனைய பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்களையும் அவன் பெறாமலேயே போய்விடுவான். எனவே பரீட்சைப் பெறுபேறுகளை ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு உங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராகுங்கள்.


இனி நீங்கள் இடைநிலைக்கல்வி மாணவர்களாகப் போகின்றீர்கள். விஞ்ஞானம், வரலாறு, புவியியல், உடற்கல்வி, வர்த்தகம், விவசாயம் எனப்பல சுவாரசியமான புதிய பாடங்கள், புதிய ஆசிரியர்களைச் சந்திக்கப் போகின்றீர்கள். உற்சாகமாக அடுத்த கட்டத்திற்குத் தயாராகுங்கள். கல்வி என்பது பேருந்துப் பயணம் போன்றது. அதில் பரீட்சைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்றவை. பேருந்து எவ்வாறு எரிபொருள் நிலையத்தில் தரித்து நின்று வீதிப் பயணத்துக்கான எரிபொருளை நிரப்புகின்றதோ அதுபோலத்தான் உங்கள் கல்விப் பயணத்திலும் பரீட்சைகள் மூலம் நீங்கள் அடுத்த கட்டத்திற்கான உந்துசக்தியைப் பெற்று அடுத்த நகர்வுக்குத் தயாராக வேண்டும்.

 ஆனால் சில மாணவர்களுக்கு பரீட்சைகள் தரிப்பிடம் போல ஆகிவிடுகின்றது. அவர்கள் அத்தோடு பயணத்தையே நிறுத்தி விடுகின்றனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் சிலர் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தாத மாணவர்கள் பலர் உயர்தரத்தில் மிகச்சிறந்த புள்ளிகளைப் பெற்று மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற கற்கை நெறிகளுக்குச் செல்கின்றனர். எனவே உங்கள் பிள்ளைகளின் பின்னால் உள்ள எதிர்காலம் பற்றிச் சிந்தியுங்கள்.


அன்பு மாணவர்களே! உங்களிடம் இந்த உலகம் நிறையவே எதிர்பார்க்கின்றது. இந்த உலகில் மனித வாழ்க்கையை இவ்வளவு தூரம் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் மாற்றி உலகை அலங்கரித்தவர்கள் யார் தெரியுமா? உங்களைப் போல் சிறுவர்களாக இருந்து கல்வி கற்று ஆற்றல்களை வளர்த்து பெரியவர்களாகியவர்களே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பவசதிகள் எல்லாமே தனி மனிதர்களது அர்ப்பணிப்பு, முயற்சி, தேடல் என்பவற்றால் உருவாக்கப்பட்டவையே. உங்களுக்குத் தெரியுமா?... கோழி முட்டைக்கு மேல் இருந்து அடைகாத்த குறும்புச் சிறுவன் எடிசன்தான் மின்குமிழ் உட்பட ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து உலகை ஒளிமயமாக்கியவர். பெரிய பூனைக்குப் பெரிய வாசலும் சிறிய பூனைக்கு சிறிய வாசலும் வைத்து பூனைக்கூடு உருவாக்கிய நியூட்டன் தான் புவியீர்ப்பைக் கண்டுபிடித்ததுடன் விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானி எனப் புகழ் பெற்றார். இவர்களோடு ஒப்பிடும் போது நீங்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர்.


எத்தனையோ விடயங்கள் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. நீங்கள் கண்டு பிடிப்பதற்காக. தீர்க்கமுடியாத பல நோய்களுக்கு நீங்கள் மருந்து கண்டுபிடிப்பீர்கள் என உலகம் உங்களிடம் காத்துக்கிடக்கின்றது. விண்வெளியில் இன்னும் செல்லாத தூரத்திற்கு நாளைய விஞ்ஞானிகள் சென்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு உங்களுக்காக எவ்வளவு வாய்ப்புக்கள் சவால்கள் காத்துக்கிடக்க, இந்த ஒரு சிறிய புலமைப்பரிசில் பரீட்சையோடு நீங்கள் துவண்டு போவதா? நீங்கள்தான் நாளைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், எழுத்தாளர்கள் ... பின்னடைவுகள் தான் பல சாதனையாளர்களுக்கு ஊன்று கோலாக அமைந்திருந்தனவாம். உங்களுக்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவு படிப்பினையாக வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். வளமான எதிர்காலத்தைப் பெறுங்கள். உற்சாகமாக நாளையை நோக்கிப் புறப்படுங்கள்.

லோ.விஜேந்திரன்
(புகழ் வெளியீட்டாசிரியர்)
அதிபர்,
மட்ஃ ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயம்