இராணுவ பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரால் ஷவேந்திர சில்வா நியமனம்



யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சவேந்திர சில்வா மீது சர்வதேச அளவில் யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனததை மேற்கொண்டுள்ளார்.

 மாத்தளையில் பிறந்த மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். ஆரம்ப பயிற்சியினை முடித்துக்கொண்டு 1986 ஆம் ஆண்டு வெளியேறிய அவர் இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றை வகித்து வந்துள்ளார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியல் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் பிரதி நிரந்தரவதிவிட பிரதிநிதியாகவும் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பிய அவர், இறுதியாக இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலாகவும் கஜபா ரெஜிமன்டின் கேர்ணலாகவும் சேவையாற்றி வந்த நிலையில் இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.