மூதூர் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலைக்கு காணி கையளிக்கும் நிகழ்வு




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சுதேச மருத்துவ கிழக்கு மாகாண ஆணையாளர் டாக்டர் ஸ்ரீதரின் வேண்டுகோளுக்கிணங்க தரமுயர்த்தப்பட்ட மூதூர் கிராம ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கட்டிடங்கள் அமைப்பதற்கும் மூலிகைத் தோட்டம் உருவாக்குவதற்கும் தேவையான காணியைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.


வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் எச்.எம். ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இடப்பற்றாக்குறைக்கான தீர்வு காணப்பட்டதோடு, காணி உரிமையாளர்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிதேச செயலாளரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

இவ்விடயத்தை மாகாண ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்து, வைத்தியசாலைக்கான கட்டிடங்களையும் ஏனைய அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொள்ள நடிவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரினால் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம், 22 வருடங்களின் பின் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.