மட்டக்களப்பிலிருந்து கடல் மார்க்கமாக தப்பிச்செல்வதற்கு 16 பேர் முயற்சி – மூவர் கைது!


இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட 3 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது 16 பேர் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு ஏனைய 13 பேரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் வந்தாறுமூலையையைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் பயணப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை ஏற்றிவந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.