அடுத்த வருட 4 மாத காலப்பகுதி அரச செலவிற்கான இடைக்கால கணக்கறிக்கை




அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் அரசாங்கத்தினால் செலவிற்காக 1,474 பில்லியன் ரூபாவிற்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை சபையில் சமர்ப்பிப்பார். இதற்கு மேலதிகமாக இந்த காலப்பகுதியில் கடனை திருப்பி செலுத்துவதற்கான வரையறையாக 721 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 தொடக்கம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறள்ளது. இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி அதாவது ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது. இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இடைக்கால கணக்கறிக்கைக்கு மேலதிகமாக 3 திருத்த சட்ட மூலங்களை இரண்டாவது வாசிப்பு மூலம் நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பிலான விவாதத்திற்கு கூடுதலான கால அவகாசம் வழங்குவதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவிருந்த வாய்மூல கேள்விக்கான நிகழ்ச்சி நிரலுக்கு வேறொரு தினத்தை வழங்குவதற்கும் தெரிவுக்குழு மேலும் திர்மானித்துள்ளது.