சர்ச்சையில் சிக்கிய மஹிந்தவின் மகன்!

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

யோஷிதவின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்ற நிலையில், சமூக வலைத்தளம் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

ஏயார் பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் யோஷித ராஜபக்ச டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளித்த நபர் ஒருவர் “பொது மக்களின் பணத்திலேயே நீங்கள் வாழ்கிறீர்கள் என்று” குறிப்பிட்டார்.

அதற்கு யோஷித, “நாம் தனிப்பட்ட தேவைக்கு பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் நீங்கள் உங்களுக்கு சரியான கல்வியை, வேலையை பெறவில்லை. மனைவி ஒருவரை பெற்று குழந்தையை உருவாக்குங்கள்” என்று மறுபதில் டுவிட் செய்திருந்தார்.

அடுத்ததாக பெண் ஒருவரது பதிவுக்கு பதிலளித்த யோஷித, “உங்களுக்கு சிஜடியை விட அதிகம் தெரியும் போல் தெரிகிறது. எனவே அவர்களுடன் இணைந்து வழக்குகளை விரைவாக முடியுங்கள். இதன்மூலம் உங்களை நிறுவனமாக வைத்திருக்க கூடிய ஆண் நண்பரை கண்டுபிடிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

சர்ச்சைக்குரிய முறையில் யோஷித வெளியிட்ட பதிவுகள் இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து யோஷித மன்னிப்பு கோரியுள்ளார்.