கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் தெரிவு !

(பாறுக் ஷிஹான்) (அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் புதன்கிழமை (12 ) 10 மணியளவில் இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர் அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியை சேர்ந்த ஏ.எம் றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராக தெரிவானார்.
முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி ) கட்சி தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்கு புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் தெரிவு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று(12) நடைபெற்ற மாநகரபையில் நடைபெற்ற இவ்விசேடகூட்டத்தில் மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 15 பேரே சமுகமளித்திருந்ததுடன் சபை நடாத்த முதல்வருடன் சேர்த்து 15 பேர் இப்பிரதி முதல்வர் தேர்வில் சமூகமளித்திருந்தனர்.இப்பிரதி முதல்வர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்றதுடன் பிரதி முதல்வர் தெரிவிற்கு கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களும், சுயேட்சை குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் இந்த கூட்டத்தொடரில் பார்வையாளராக வருகை தந்திருந்தார்.

புதிய பிரதி முதல்வரின் கன்னி உரையில்

தமிழ் முஸ்லிம் உறவு என்பது பேணப்பட வேண்டிய ஒன்று. இன மத பேதத்தித்திற்கு அப்பால் செயற்படுவேன்.இதற்காக அனைவருடன் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிய பிரதி முதல்வராக தெரிவானவர் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் தவப்புதல்வராவார்.
கட்சியின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பு செயலாளராகவும்,கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டுவரும் இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழையமாணவருமாகும்.

முன்னாள் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பு செயலாளராகவும். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவி வகித்த நீதி அமைச்சு,நகர அபிவிருத்தி அமைச்சுகளிலும் இணைப்பு செயலாளராக கடமை புரிந்து இருக்கின்றார்.இன,மத பிரதேச வேறுபாடுகள் கடந்து தனது தந்தையின் அரசியல் வியூகத்தை தன்னகத்தே கொண்டு தாழ்ந்தவர்,உயர்ந்தவர்,ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி எல்லா மக்களை ஒன்றிணைந்து சேவையாற்றக்கூடியவர்

தனது தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ரகுமத் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை செவ்வனே செய்து வருகின்றார். இலவச குடிநீர் இணைப்புகள், மின்சார வசதிகள், வீடுகட்டுவதற்கான உதவிகள், வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள், மீனவர்களுகான உதவிகள், சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கான படிப்பு வசதிகளை மேம்படுத்துதல், புலமைப்பரிசில், கா.பொ.தா (சா/தா), உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி கருத்தரங்குகள், போட்டிப்பரீட்சையில் தோன்றுபவர்களுக்கு முன்னோடி கருத்தரங்குகள் என பல்வகையான சேவைகளை செய்து வருகின்றார்.